சென்னையில் வாகன ஓட்டிகள் பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், இரவில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே செல்ல வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
புதிய தொழில்நுட்பமான கொண்ணாட் நவீன கருவிகளை சென்னை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு, பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சரட்கர், போக்குவரத்து இணை ஆணையர் மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால் கூறியதாவது:
“ரூ.7 கோடி மதிப்பிலான போக்குவரத்து அதி நவீன உபகரணங்கள், இண்டர்செப்ட் வாகனங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டது. போக்குவரத்து விதிமுறை மீறலான அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிவதில் சிக்கல் இருந்தது. தற்போது அது இல்லை. சென்னையில் பெரும்பாலான இடங்களில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறியும் ரேடார் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது மேலும் 20 இடங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் கண்டறியும் கண்காணிக்கும் முறையை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளோம். கூகுள் மேப் ட்ராபிக் அலர்ட் என்கிற அந்த புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை எளிதாக காணலாம்.
வாகனத்தில் அதிக வேகத்தில் செல்வது, தலை கவசம் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறான விதிமீறல்கள் போக்குவரத்து சிக்னலில் மட்டும் கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இண்டர்செப்ட் வாகனங்கள் மூலமும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை நடுவழியில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை பொறுத்தவரை மதுரவாயில் பாரிஸ் உள்ளிட்ட பத்து இடங்களில் ஸ்பீடு ரேடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இன்னும் 20 இடங்களில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்பீடு ரேடர் கருவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.
போக்குவரத்து தொடர்பாக 12 குறும்படங்களும் இயக்குவதற்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. லைவ் ட்ராபிக் மானிட்டரின் மூலம் கூகுளிடம் இருந்து டிராபிக் டேட்டாவை பெற்று ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவிட்டு எந்தெந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது என கண்டுபிடித்து, போக்குவரத்தை சீர்செய்ய போக்குவரத்து துறை தயாராகி வருகிறது.
குறிப்பாக மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் சரிவர செயல்பட முடியாமல் இருக்கிறது. அதனை சீர் செய்வதற்கும் அரசு நிதி ஒதுக்கி இருக்கிறது. அடுத்தபடியாக அந்த பணியும் நடைபெறும்.
ஓவர் ஸ்பீட் தொடர்பாக பகலில் 40 கி.மீ வேகத்திலும் இரவில் 50 கி.மீ வேகத்திலும் வாகனங்கள் இயக்க வேண்டும் என ஏற்கனவே இருந்த போக்குவரத்து நடைமுறை விதிகளை தற்பொழுது அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்களுக்கு தானியங்கி கேமராக்கள் மூலமாக இ-சலான்கள் அவர்களுடைய மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக சென்று விடும்.”
இவ்வாறு காவல் ஆணையர் சங்கர் ஜீவால் தெரிவித்தார்.







