சொத்து குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கூடாது என்ற உள்நோக்கத்துடனேயே பிழைகள் கொண்ட மனுவை ராஜேந்திர பாலாஜி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக வாதிட்டார்.
இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் மேற்கொண்டு வாய்தா கேட்கக்கூடாது என கண்டிப்புடன் கூறினார்.
மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காவிட்டால், அடுத்த விசாரணையின்போது இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என தெரிவித்து, அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.