சென்னை கோடம்பாக்கம் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் ஒரே நாளில் 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா வைத்திருந்த மூவரை கைது செய்தனர்.
சென்னை பெருநகரில் போதை தடுப்பு நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வருபவர்களையும் மற்றும் விற்பனை செய்பவர்களையும் சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினருக்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசார் கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் சோதனை செய்து வந்தனர்.
அப்பொழுது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர் வைத்திருந்த பையில் 10கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதே போல் கொளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் கொளத்தூர் ,தைலம் தோப்பு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபரிடம் போலிசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் விற்பனைக்காக 1.2 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் அருகில் நின்றுகொண்டிருந்த நபரை விசாரணை செய்தபோது அவர் கஞ்சா பெற்று விற்பனை செய்பவர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 11 கிலோ கஞ்சா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
-கோ. சிவசங்கரன்