கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர் மற்றும் K.P.அன்பழகன் ஆகியோர் மீது ஒரே நாளில் தனித்தனியே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவரும், தற்போது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் மீது அவர் அமைச்சராக இருந்த 01.04.2016 முதல் 31.03.2021 காலகட்டத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் மொத்தம் ரூ.27,22,56,736/- அளவிற்கு வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 56 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போல விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவின் பெயரிலும், அவரது குடும்பத்தினரின் பெயரிலும் ராசி புளூ மெட்டல்ஸ், V Infrastructure. ராசி எண்டர்பிரைசஸ் ஆகிய பெயர்களில் நிலங்கள், தொழில் முதலீடு, வங்கி இருப்புகள், இயந்திர தளவாடங்கள், வாகனங்கள் மற்றும் ஆபரணங்கள் என முதலீடு செய்து மொத்தம் ரூ.35,79,90,081/- அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற்று இன்று புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விஜயாபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 மற்றும் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 மற்றும் இந்திய தண்டனைச்சட்டத்தின்படி உரிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராகவும், தற்போது பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருக்கும் K.P.அன்பழகன் மீது அவர் அமைச்சராக இருந்த 01.04.2016 முதல் 31.03.2021 வரையிலான கால கட்டத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி மல்லிகா, அவரது மகன்கள் சசிமோகன் மற்றும் சந்திரமோகன் ஆகியோர்கள் பெயரில் மொத்தம் ரூ.11,32,95,755/- அளவிற்கு வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக, தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், 58 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் K.P.அன்பழகன் மற்றும் அவரது உறவினர்களான ரவிசங்கர், சரவணன், சரவணக்குமார் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளான மாணிக்கம், மல்லிகா மற்றும் தனபால் ஆகியோரது பெயரில் நிலங்கள், தொழில் முதலீடு, வங்கி இருப்புகள், நிலம், இயந்திர தளவாடங்கள், ஆபரணங்கள், வாகனங்கள் என சொத்துக்களாகவும், முறைகேடாக பெற்ற பணத்தை அவருக்கு சொந்தமான சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளைக்கு அனுப்பியதன் வழியாகவும் என மொத்தம் ரூ.45,20,53,363/- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் புலன்விசாரணை முடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவரிடம் அனுமதி பெறப்பட்டது. அதன்படி இன்று தருமபுரி சிறப்பு நீதிபதி/தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 10 நபர்கள் மற்றும் சரஸ்வதி பச்சியப்பன் கல்வி அறக்கட்டளை மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 மற்றும் 2018-ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 1860- ன்படி உரிய பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.