சந்திரயான் 3 விண்கலத்தை புவி சுற்றுவட்டப்பாதையின் 5-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் இது அன்றைய தினமே நிலைநிறுத்தப்பட்ட நிலையில், படிப்படியாக விண்கலம் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளுக்கு உயர்த்தப்படுகிறது.
இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தை புவி சுற்றுவட்டப்பாதையின் 5-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் 5-வது கட்டமாக சந்திரயான் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.
மேலும் விண்கலம் 127609 km x 236 km சுற்றுவட்டப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கண்காணிப்புக்கு பிறகு இந்த சாதனை குறித்து பகிரப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பூமியின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து விலகி, நிலவை நோக்கி பயணிக்க தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







