பழனி மலைக்கோயிலுக்கு செல்போன் மற்றும் வீடியோ, கேமரா கொண்டுசெல்ல
விதிக்கப்பட்டுள்ள தடை நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள்
அவ்வப்போது ஆகமவிதியை மீறி பழனி மலைக்கோயில் கருவறையில் உள்ள நவபாஷாண மூலவரை படம்பிடித்து சமூகவலை தளங்களில் பரப்புவது வாடிக்கையாக உள்ளது. இதனால் பக்தர்கள் கவலை அடைகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவறையை செல்போனில் படம்பிடிக்க முயன்ற பெண் ஒருவரை பாதுகாப்பு ஊழியர் தடுத்து வெளியேற்றியதால், பெண்ணின் தந்தை திருக்கோவில் ஊழியர் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தினார்.
இந்நிலையில் பழனி கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்வது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அக்டோபர் 1ம்தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடைவிதித்து நடவடிக்கை எடுப்பதாக, மதுரை நீதிமன்ற கிளையில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இதன் அடிப்படையில் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போன்கள், காமிராக்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் சாதனங்களை கொண்டு வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் வீடியோ கேமராக்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்லும் வகையில் பழனி அடிவாரத்தில் உள்ள
பாத விநாயகர் கோயில், மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் நிலையங்களில் ஏற
கைபேசி பாதுகாப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக செல்போன் ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் பழனி திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை மலைக்கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், தடையை மீறி கொண்டு வரும்
செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.