காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்லி செல்ல உள்ள தமிழ்நாடு எம்பிக்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு சேரவேண்டிய நீரை கர்நாடகம் உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரின் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை (18.09.2023) கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.
மத்திய அரசு அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருடன் நாளை (18.09.2023) மாலை சந்திக்க உள்ளனர்.
இந்த சந்திப்பின் போது கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கிடக் கோரி மத்திய ஜல்சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்த குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு (திமுக), எஸ்.ஜோதிமணி (இ.தே.கா), மு.தம்பித்துரை மற்றும் என்.சந்திரசேகரன் (அஇஅதிமுக), கே.சுப்பராயன் (சிபிஐ) பி.ஆர்.நடராசன் (சிபிஎம்), வைகோ (மதிமுக), திருமாவளவன் (விசிக), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.வாசன் (தமாகா), கே.நவாஸ் கனி (இயூமுலீ) மற்றும் ஏ.கே.பி. சின்னராஜ் (கொமதேக) ஆகியோர் மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களை சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







