பாலியல் சார்ந்த குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கும் நடைமுறையை எடுக்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
தாய்லாந்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை 16,413 பாலியல் குற்றவாளிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,848 பேர் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், பாலியல் சார்ந்த குற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கும் நடைமுறை தொடர்பான மசோதா கடந்த மார்ச் மாதம் தாய்லாந்து கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது. 145 செனட் உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். 2 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஒரு ஓட்டு பெறப்பட்ட பின் மசோதா அமலுக்கு வரும்.
மசோதாவில், “பாலியல் குற்றவாளிகள் மீண்டும் அக்குற்றத்தில் ஈடுபடாமல் தடுக்க ஊசி மூலம் டெஸ்டெரோன் அளவை குறைக்கும் சிகிச்சை மேற்கொள்ளலாம். இந்த சிகிச்சை எடுத்துகொண்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு கண்காணிக்கப்படுவதோடு, கையில் மின்னணு பிரேஸ்லெட் அணிந்து கொள்வதும் அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்க முறையை செயல்படுத்தி வரும் போலந்து, தென் கொரியா, ரஷ்யா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளின் பட்டியலில் தாய்லாந்தும் சேரும்.
இது குறித்து தாய்லாந்து நீதித் துறை அமைச்சர் சோம்சக் தேப்சுதின் கூறுகையில், “இந்த சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த மருத்துவமுறையால் பாலியல் குற்றங்கள் குறைந்து வருகிறது. இனி வரும் காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த செய்திகள் யார் கண்ணிலும் படக்கூடாது” என தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. பெண்கள் மற்றும் ஆண்கள் முன்னேற்ற இயக்கத்தைச் சேர்ந்த ஜேட் சௌவிலாய், ‘ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதால் பாலியல் குற்றங்கள் குறையப்போவதில்லை, குற்றவாளிகள் சிறையில் இருக்கும்போது அவர்கள் மனநிலையை மாற்றி மறுவாழ்வு அளிக்க வேண்டும். தண்டனை அளிப்பதும் ஆண்மை நீக்கம் செய்வதும் குற்றவாளி தன் குற்றத்தை உணர்ந்து மறுவாழ்வு பெற வழியில்லை என்பதை உணர்த்துவதாக உள்ளது’ என்றார்.
– ரேவதி