2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் மாற்ற அனுமதிக்க கூடாது எனக்கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.மேலும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும், இதற்கு அடையாள அட்டை எதுவும் வழங்க தேவையில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், பாஜக வழக்கறிஞரான அஸ்வினி உபாத்யாய் என்பவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு சர்ச்சை தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பெரும்பாலான குணிமக்களிடம் ஆதார் அடையாள அட்டை உள்ளது,அதேபோல வங்கிக் கணக்கும் உள்ளது அப்படி இருக்கும்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடையாள அட்டை எதுவும் தேவையில்லை என தெரிவிப்பது முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். எனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது உரிய அடையாள அட்டை கொடுத்து மாற்றும் வகையில் புதிய அறிவிப்பை கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதனால் ஏற்படும் முறைகேடுகளை தடுக்க முடியும் என மனுவில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு அவசர வழக்காக, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது அப்போது, ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது ஒரு நிர்வாக நடவடிக்கையே தவிர, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை அல்ல என கூறினார். இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா