ஹோமியோபதி கல்லூரிகளில் நீட்தேர்வு எழுதாமலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது குறித்து எழுந்துள்ள புகாரையடுத்து தேசிய ஹோமியோபதி ஆணையம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவ படிப்பு, பல்மருத்துவம், ஹோமியோபதி போன்ற படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் நீட் நுழைவு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி அடைய வேண்டும். இந்நிலையில் வரும் கல்வியாண்டுக்கான மருத்துவ சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சில ஹோமியோபதி கல்லூரிகளில் நீட் தேர்வு எழுதாமலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து தேசிய ஹோமியோபதி ஆணையம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி சேர்க்கை நடத்தி, பின் ஏதும் காலியிடம் இருப்பின் அதில் நீட் எழுதாத மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்று சில உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது அந்தந்த மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது.
நீட்தேர்வு எழுதாமலேயே மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேரலாம் என்று அறிவிப்பு வெளியிடும் கல்லூரிகளிடம் மாணவர்கள், பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். கல்லூரிகளின் அறிவிப்பை நம்பி சேர்ந்தால், பின் சேர்க்கைக்கான அங்கீகாரம் கிடைக்காது என எச்சரிக்கைவிடுத்துள்ளது.