சென்னை, ஆயிரம் விளக்கில் அமைந்துள்ள தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இப்பேருந்தில், 5 குழந்தைகள் தங்கள் தாய் அல்லது தந்தையுடன் பயணிக்கும் வகையில் இருக்கை வசதி, 5 குழந்தைகளை நவீன சக்கர நாற்காலிகள் அசையாமல் வேனுடன் பிணைக்கும் வகையிலான வசதி, கண்காணிப்பு கேமரா மூலமாக பேருந்து நிகழ்வுகளை காணும் வசதி, வாகனத்தில் சக்கர நாற்காலியுடன் ஏறும்போது பக்கவாட்டில் பிடிப்பதற்கான கைப்பிடி, குழந்தைகள் வாகனத்தில் ஏறி, இறங்கும்போது சைரன் ஒலிக்கும் வகையில் வடிவமைப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், இப்பேருந்தை 40-50 கி.மீ. வேகத்தில் வரை இயக்கலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தசைத்திறன் குறைபாடுள்ளோருக்கான சிறப்பு பள்ளியில் பெற்றோருக்கு நம்பிக்கை தரும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், குழந்தைகள் மட்டுமல்ல குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் தேவை என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திராவிட மாடல் உருவான இடம், அந்த இடம் என்ற அவர் பெற்றோருக்கு நம்பிக்கை தரும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளதாகவும், தைரியமாக இருங்கள் என பெற்றோரிடம் முதலமைச்சர் கூறியதாகவும் தெரிவித்தார்.