குஜராத்தில் நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
குஜராத்தின் நவ்சாரி பகுதியில் அகமதாபாத்-மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து மற்றும் கார் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்து அப்பளம் போல் காட்சியளிக்கிறது. பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். ஒருவர் படுகாயமடைந்து உள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்தவுடன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததோடு, உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி நவ்சாரி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரெண்டு வி.என். பட்டேல் கூறும்போது, விபத்தில் பஸ் மற்றும் கார் சிக்கி கொண்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். பலத்த காயமடைந்த நபர் சூரத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் என கூறியுள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.