டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணியும் ஆஸ்திரேலிய அணியும் இன்று மோதுகின்றன.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கும் லீக் போட்டியில், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. இலங்கை அணி தனது முந்தைய போட்டியில் பங்களாதேஷையும் ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி இருப்பதால் இரண்டு அணிகளும் இரண்டாவது வெற்றிக்காகக் காத்திருக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இலங்கை அணியில் குசல் பெரேரா, சரித் அசலங்கா, அவிஸ்கா பெர்ண்டாண்டோ, வனிந்து ஹசரங்கா, பனுகா ராஜபக்சே சிறப்பான ஃபார்மில் உள்ளனர். பந்துவீச்சில் சமீகா கருணாரத்னே, பினுரா பெர்னாண்டோ, லஹிரு குமரா அதிரடி காட்டுகின்றனர். பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில், சரத் அசலங்கா அதிரடியாக, 49 பந்துகளில் 80 ரன்கள் விளாசி மிரட்டினார். பனுகா ராஜபக்சே 31 பந்துகளில் 53 ரன்கள் விளாசி அந்த அணி வெற்றி பெற உதவினார். இன்றைய போட்டியிலும் அவர்கள் தங்களின் அதிரடியை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம்.
ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பின்ச், தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஆகியோரின் ஃபார்ம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. மிட்செல் மார்ஷ், ஸ்மித், ஆகியோரும் தடுமாறி வருகின்றனர். இருந்தாலும் மேக்ஸ்வெல், ஸ்டோயினிஸ், மாத்யூ வேட் ஆகியோரின் பேட்டிங்கை அந்த அணி நம்பி இருக்கிறது. பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆதம் ஜம்பா, ஹசல்வுட் ஆகியோர் அதிரடியாக ஆடி வருகின்றனர். இடையில் மேக்ஸ்வெல்லும் பந்துவீசி விக்கெட் சாய்ப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். இருந்தாலும் டி20 போட்டியில் எதுவும் நடக்கலாம் என்பதால் இன்றைய போட்டியும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.