பொதுத் தேர்வில் சாதித்த அண்ணன், தங்கை – 12ம் வகுப்பில் அண்ணனும், 10ம் வகுப்பில் தங்கையும் மாநிலத்தில் 3ம் இடம் பிடித்து அசத்தல்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அண்ணனும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தங்கையும் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். 

தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 94.64 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி கிருத்திகா 500க்கு 497 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். அதேபோல கடந்த எட்டாம் தேதி வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், அதே பள்ளியில் பயின்ற கிருத்திகாவின் அண்ணன் சுனில் 600க்கு 597 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.

ஒரே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற அண்ணனும், பத்தாம் வகுப்பு பயின்ற தங்கையும் அதிக மதிப்பெண் எடுத்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ஓவியா 500க்கு 498 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.