பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த சட்டம் வரவேண்டும், இந்தியா முழுமைக்கும் பொதுவானது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினேன். இந்த நாட்டில் இருக்கிற அனைவருக்கம் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்த சட்டமானது ஏற்கனவே அமலில் இருக்கும் இடஒதுக்கீட்டிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறது என்பதை மிக மிக தெளிவாக இந்த அமர்வின் தீர்ப்பு தெளிவுப்படுத்தி இருக்கிறது. ஜாதி என்பதை தாண்டி மனிதநேயம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் இன்று இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக வழக்கறிஞர் பாலு கூறுகையில், இது சமூகநீதியின் அடிப்படை கோட்பாட்டிற்கு இந்த தீர்ப்பு எதிரானது. இந்தியா முழுவதும் இருக்க கூடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வேண்டும் என்று போராடி பெற்ற இடஒதுக்கீட்டை தட்டி பறிக்ககூடியதாகவும், சிதைக்க கூடியதாகவும் தீர்ப்பு அமைந்திருக்கிறது. இந்தியாவில் முன்னேறிய வகுப்பில் எத்தனை சதவீதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எத்தனை சதவீதம் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர் என்ற அடிப்படை தரவு இல்லாமல் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்கள் எத்தனை சதவீதம் பேர் இருக்கிறார்கள். எந்த அடிப்படையில் மத்திய அரசு முடிவுக்கு வந்தது என்ற கேள்வியை மத்திய அரசிடம் கேட்க உச்சநீதிமன்றம் தவறியது. முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று கூறுவது அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை கோட்பாட்டிற்கு எதிரானது என்று பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.