ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு பாஜக தயாராக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உ.பி.யில் மோடி தலைமையில், யோகியின் ஆட்சியில் பாஜக 68 சதவீத இடங்களில் வென்றுள்ளதாக கூறினார். உபியில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருப்பது வரலாற்று சாதனை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக உள்ள மணிப்பூரில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதாகவும் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்தார். கோவாவிலும் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரசுக்கான நேரம் முடிந்துவிட்டது என்றும் மகாத்மா காந்தி சொன்னது உண்மையாகிவிட்டதாகவும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு பாஜக தயாராக உள்ளதாகவும் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கும்மிடிப்பூண்டி வரைக்கும் தான் ஸ்டாலின் அலை என்றும், அதைத்தாண்டி எங்கும் ஸ்டாலின் அலை வீசவில்லை என்றும் அவர் கூறினார். திமுகவால் தேசிய அளவில் எந்த முன்னணியை உருவாக்க முடியும் என்று கேள்வி எழுப்பியவர், தமிழ்நாட்டு மக்கள் பாஜக மீது அன்பு செலுத்த தயாராகிவிட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.