பஜனையின் போது பாடப்படும் பாடலின் வரிகளை, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தனது ஆல்பத்தில் தவறாக பயன்படுத்தியுள்ளதாக தெலுங்கு நடிகை ஒருவர் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழில் சச்சின், வில்லு, கந்தசாமி, சிங்கம், வீரம், தி வாரியர் உட்பட பல படங்களுக்கு இசை அமைத்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார். ’புஷ்பா’ படத்தில் இவர் இசை அமைத்த பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. இவர் அவ்வப்போது இன்டிபெண்டட் மியூசிக் என்ற வகையிலான தனி ஆல்பத்தை வெளியிட்டு வருகிறார்.
இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் இவர் சில நடிகைகளுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டார். சமீபத்தில் தெலுங்கு நடிகை புஜிதா பொன்னடாவை அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை நடிகை புஜிதா மறுத்தார். இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சமீபத்தில் “ஓ பேபி” என்ற இசை ஆல்பத்தை தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்டார். தெலுங்கில் இது “ஓ பாரி” என்ற பெயரில் வெளியானது. இந்த பாடலை ரகீப் ஆலம் எழுதியுள்ளார். தற்போது இந்த பாடலில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை புண்படுத்துவதாக தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி, ஐதராபாத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். அந்த புகாரில் “ஓ பாரி” ஆல்பத்தில், பஜனையின் போது பாடப்படும் பாடலின் வரிகள் தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் இந்த பாடலை உடனே தடை செய்ய வேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக கராத்தே கல்யாணிக்கு சம்மன் கொடுத்து நேரில் வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்தே இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.








