மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் முறைகேடாக வைத்துள்ள நிலங்களை ஒப்படைக்க கோரி நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னுக்கு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியது. சில நாட்களிலேயே அமர்த்தியா சென்னுக்கு அடுத்தெடுத்து கடிதங்களை பல்கலைக்கழகம் அனுப்பியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அமர்த்திய சென், சாந்திநிகேதனில் நான் வைத்துள்ள நிலங்கள் அனைத்தும் என் அப்பாவால் வாங்கப்பட்டது. சில நிலங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். மேலும், இங்கிருந்து என்னை வெளியேற்ற முயற்சி நடக்கிறது எனவும் அமர்த்தியா சென் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாந்தி நிகேதனில் உள்ள அமர்த்தியா சென் வீட்டுக்கு சென்று அவர் வைத்துள்ள நிலங்களுக்கு சொந்தமான ஆவணங்களை வழங்கினார். மேலும் அதன்பிறகு, இதற்கு மேல் பாஜக அமர்த்தியா சென்னை இழிவுபடுத்துவதை பொறுத்துக் கொள்ளமுடியாது. அவர் வைத்துள்ள நிலங்களின் ஆவணங்களை கொடுத்துள்ளேன். பல்கலைக்கழகம் மீது சட்டப்படி அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் மாணவர்களை காவிமயப்படுத்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. பல்கலைக்கழக பணிகளில் ஈடுபட வேண்டும். பல்கலைக்கழம் அமர்த்தியா சென்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து அறிக்கை ஒன்றை விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், விஸ்வபாரதி பல்கலைக்கழகம் ஒரு மத்திய பல்கலைக்கழகம். உங்கள் ஆசிர்வாதன் இன்றி நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். ஏனெனில் பிரதமர் மோடி வழிகாட்டுதலின் படி செயல்படுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.







