ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு – #NIA குற்றப்பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில், என்ஐஏ இன்று (செப். 9) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில்,  கடந்த மார்ச் 1 ஆம் தேதி 2 ஐஇடி…

Bengaluru cafe blast - Shocking information revealed in #NIA chargesheet!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில், என்ஐஏ இன்று (செப். 9) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில்,  கடந்த மார்ச் 1 ஆம் தேதி 2 ஐஇடி குண்டுகள் வெடித்தன.  இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன.  இந்த விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி  வந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய என்ஐஏ அதிகாரிகள்,  அப்துல் மதீன் டஹா மற்றும் முசவீர் ஹசன் ஆகிய 2 பேரை கடந்த ஏப்ரம் மாதம் 12ம் தேதி மேற்குவங்கத்தில் கைது செய்தனர்.  இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (செப்.9) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

என்ஐஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரைக்கையில், முஸ்ஸாவீர் ஹுசைன் ஷாஸிப், அப்துல் மதீன் அகமது டாஹா, மாஸ் முனீர் அகமது, முழமில் ஷரீஃப் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளனர். இவர்கள் கிரிப்டோ கரன்சி மூலம் நிதி பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட அதே நாளில், பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள மாநில பாஜக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டனர். ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனதை அடுத்து அவர்கள் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடிப்பு நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.