சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரரான பென்ஸ்டோக்ஸ் காயம் காரணமாக தனது சொந்த நாடான இங்கிலாந்துக்கு திரும்புவதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகிறது . இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திலும் சென்னை அணி இரண்டாம் இடத்திலும் உள்ளது. சென்னை அணியில் முக்கிய வீரராக கருதப்படும் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு 16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
காயம் காரணமாக பென்ஸ்டோக்ஸ் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் போட்டிகளில் களமிறங்கவில்லை, மொத்தமாக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்தது என்றே கூறலாம். இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் கடந்த வாரம் வெளியிட்டது. இதன் மூலம் கொல்கத்தா அணியுடன் நடைபெற்ற போட்டியில் பென்ஸ்டோக்ஸ் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால அந்த போட்டியிலும் பென்ஸ்டோக்ஸ் விளையாடவில்லை.
இதனையடுத்து சென்னை அணியின் கடைசி லீக் போட்டியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து புறப்பட உள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியில் விளையாடாத நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் கூட சென்னை அணியில் அவர் இடம்பெறாதது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







