ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, உயிருக்கு போராடி கொண்டிருக்கும் கேப்டன் வருண் சிங், செப்டம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி குன்னூர் நஞ்சப்பசத்திரத்தில், நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கிய, கேப்டன் வருண் சிங், பெங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவர், கடந்த ஆண்டு, தொழில்நுட்ப கோளாறால், தேஜாஸ் போர் விமானத்தில் நேரவிருந்த விபத்தை, துரிதமாக செயல்பட்டு தடுத்தார். இவர் சேவையை பாராட்டி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு, சௌரிய சக்ரா விருது வழங்கி கெளரவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், கேப்டன் வருண் சிங், தான் பயின்ற பள்ளியின் முதல்வருக்கு, மாணவர்களை ஊக்கமளிக்கும் விதமாக, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளர். இதில், பள்ளியில் பயிலும் அனைவரும் 90க்கு மேலே மதிப்பெண் எடுத்து, சிறந்த மாணவராக வலம் வர முடியாது எனவும், சராசரி மாணவராக இருப்பது இயல்பானதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சராசரி மாணவராக இருப்பது மட்டுமே வாழ்வின் அடுத்தகட்ட அளவீடு அல்ல என்று கூறியுள்ள வருண்சிங், சராசரி மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களாலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என அந்த கடிதத்தில் நம்பிக்கையூட்டியுள்ளார். 12ஆம் வகுப்பு பயிலும்போது, பள்ளியில் தான் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியபோதும், படிப்பு, விளையாட்டு என அனைத்திலும் சராசரியாக இருந்ததாக தெரிவித்துள்ள வருண் சிங். விமானம் மற்றும் விமானத்தில் பயணிப்பதிலேயே அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம், சமூக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அவர் விரைந்து மீண்டு வர வேண்டும் எனவும் நாட்டு மக்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.