அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு போட்டியாக பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பார்பி திரைப்படம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவான ‘ஓபன்ஹெய்மர்’ படம் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி, மேட் டேமன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அதே நேரத்தில் இயக்குநர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், கிரேட்டா கெர்விக், வில் ஃபெரெல், எம்மா மேக்கி, சிமு லியு, மைக்கேல் செரா, கேட் மெக்கின்னன் ஆகியோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் பார்பி.
ஓபன்ஹெய்மர் படத்துக்கு முதல் நாளில் இருந்தே உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் முதல்நாளிலேயே 90 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. மற்றொரு பக்கம் பார்பியும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்து வருவதாகவும் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் நான்காம் வார இறுதி நாளான நேற்று மட்டும் பார்பி திரைப்படம் 3.37 கோடி வசூலை பெற்றதாகவும், அதேபோல் உலகம் முழுவதும் இன்னும் 4137 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஓபன்ஹெய்மர் திரைப்படம் 3761 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் பாக்ஸ்ஆஃபிஸில் பார்பி படம் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாகவும், ஓபன்ஹெய்மர் திரைப்படம் கடந்த வாரம் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும், தற்போது இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பார்பி திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த பெண் இயக்குனர் என்ற பட்டத்தை இயக்குனர் கிரேட்டா கெர்விக் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.







