குடியாத்தத்தில் ஷவர்மாவுக்கு தடை

குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டதில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் தமிழ்நாட்டில் தஞ்சை, மதுரை போன்ற இடங்களில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கும் உடல்நலக் குறைவு…

குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டதில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் தமிழ்நாட்டில் தஞ்சை, மதுரை போன்ற இடங்களில் ஷவர்மா சாப்பிட்டவர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நகர்மன்ற அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள், “ ஷவர்மாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதற்கு குடியாத்தம் நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், இதுபோன்ற கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய குடியாத்தம் நகரமன்ற தலைவர் சௌந்தரராஜன், “
பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட இளைஞர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும்
ஷவர்மாவால் உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே
உடலுக்கு தீங்கு ஏற்படும் சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மா மட்டும் குடியாத்தம்
நகராட்சியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.