சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற மாஜிஸ்திரேட் ராமராஜூக்கு ஜாமின் அளித்து உயர் நீதிமனற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தனியார் யூ டியூப் சேனலில் ஜாதி குறித்து பேசியதாக தென்காசி மாவட்ட செந்தாமரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அளித்த புகாரில் கடந்த மாதம் ஓய்வு பெற்ற மாஜிஸ்திரேட் ராமராஜ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது மனுதாரர் ஒரு பொறுப்பு மிக்க பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் இதுபோன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் பேசியிருக்கக் கூடாது என தெரிவித்தார். மனுதாரர் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.







