கடையநல்லூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றவர்களுக்கு, கிழிந்த ரூபாய் நோட்டுகளும், கரையான் பிடித்த 500 ரூபாய் நோட்டுக்களும் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பண்பொழி சாலையில் தனியார் நிறுவன ஏடிஎம் இயந்திரம் உள்ளது. முக்கிய பகுதியில் இந்த ஏடிஎம் இயந்திரம் உள்ளதால் மற்ற வங்கி ஏடிஎம் மையத்தை விட இதனை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் நேற்று மேலக்ககடையநல்லூரை சேர்ந்த ஒரு பெண் 9 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். அப்போது அந்த ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வந்த 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் வந்துள்ளது. சில கிழிந்த நோட்டுகள் பேப்பர் வைத்து ஒட்டப்பட்ட நிலையில் வந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே தாம் கணக்கு வைத்திருந்த வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்தார். அதற்கு சம்பந்தப்பட்ட ஏடிஎம் தங்கள் வங்கியை சேர்ந்தது இல்லை என்று வங்கியில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனால் தவித்த அவர், தனியார் நிறுவன ஏடிஎம் ஊழியரிடம் புகார் தெரிவித்தார். அப்போது, இதுகுறித்து திருநெல்வேலி மண்டல அலுவலகத்தில் புகார் செய்ய கூறிவிட்டு அவர் சென்றார். இது போல் மற்ற வாடிக்கையாளர்கள் சிலருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த அந்த பெண், எனது கணவர் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். மகளின் பள்ளி சீருடைகள் வாங்க அனுப்பிய பணத்தை அவசர தேவைக்காக எடுத்த போது இவ்வாறு உள்ளது என வேதனை கூறினார். அவசர தேவைக்காகதான் பொதுமக்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கின்றனர். ஆனால் அதில் இருந்து வினியோகம் செய்யப்படும் நோட்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது வேதனைக்குரியது என்றார். இதுபோன்ற தனியார் ஏடிஎம்மையங்களை வங்கி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
– இரா.நம்பிராஜன்