திருப்பூர் அருகே கடன் தொல்லை காரணமாக கணவரை காருக்குள் வைத்து மனைவியே எரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியைச் சேர்ந்தவர் 62 வயதான ரங்கராஜன். இவரது மனைவி 55 வயதான ஜோதிமணி. ரங்கராஜன் விசைத்தறி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். தொழிலில் நஷ்ட்டம் ஏற்படவே அதனை ஈடுகட்ட தெரிந்தவர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கியிருக்கிறார். அப்படி சிறுக சிறுக வாங்கிய கடன் தொகை சுமார் 1 கோடி ரூபாயை எட்டியது.
ஒருகட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்க தொடங்கினர். பணம் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் ரங்கராஜன்.

இந்நிலையில் கடந்த மாதம் ரங்கராஜனுக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவத்தன்று இவரது மனைவி ஜோதிமணியும் உறவினர் ராஜாவும் சேர்ந்து ரங்கராஜனை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ஆம்னி வேனில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வந்துக்கொண்டிருந்த போது காரில் இருந்து புகை வந்ததாகவும் அதனால் காரில் இருந்து ஜோதிமணியும் ராஜாவும் கீழே இறங்கிவிட்டனார். கார் தீ பற்றிக் கொண்டதில் ரங்கராஜன் காருக்குள் சிக்கி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ரங்கராஜன் 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு எடுத்திருந்திருக்கிறார் என்றும் அதற்கு நாமினியாக ஜோதிமணியை நியமித்திருந்திருக்கிறார் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடன் தொல்லை தாங்க முடியாததால் தன்னை கொலை செய்து விடுங்கள் என ரங்கராஜன் கூறியதாகவும் அதனால் கடன் பிரச்னையில் இருந்து மீளவும் 3 கோடி ரூபாய் காப்பீடு தொகையை பெறவும் காருடன் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக இருவரும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து ஜோதிமணியையும் அவருக்கு உதவியாக செயல்பட்ட உறவினர் ராஜாவையும் கைது செய்த காவல்துறையினர், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.







