ஆசிய கோப்பை – 6-வது முறையாக வெற்றியை ருசித்த இலங்கை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 6-வது முறையாக இலங்கை அணி கோப்பையை தட்டி சென்றது.   15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி துபாயில் நேற்று இரவு இந்திய…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 6-வது முறையாக இலங்கை அணி கோப்பையை தட்டி சென்றது.

 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி துபாயில் நேற்று இரவு இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.

 

அந்த அணியில் சிறப்பாக விளையாடிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹசரங்கா டி சில்வா 36 ரன்னும், தனஞ்செய டி சில்வா 28 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. ஆனால் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் வெளியேறினார். இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார்.

 

பின்னர் பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 ஆண்டிற்கு பிறகு இலங்கை அணி தற்போது ஆசிய கோப்பை வென்றது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். வானவேடிக்கைகள் உடன் இலங்கை அணி பரிசு கோப்பையை கொண்டாடியது.

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், அந்த அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளதால், இலங்கை வீரர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.