ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை: ரயில்வே அமைச்சர்

ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழுவினர் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் லூப் திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.…

ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழுவினர் அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் லூப் திட்டத்தை வடிவமைத்துள்ளனர். இதனை மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டு திட்டத்தை வடிவமைத்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைப்பர் லூப் திட்டத்திற்காக மத்திய ரயில்வே சார்பில் ரூ.8.5 கோடி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

தென்னக ரயில்வேயில் அதிக யானைகள் விபத்துக்குள்ளாவதாகக் கூறிய ரயில்வே அமைச்சர், இதனைத் தடுக்கும் நோக்கில் யானைகள் தண்டவாளங்களை கடக்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு, யானைகள் செல்வதற்கு ஏற்ப சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் 5 ரயில் நிலையங்கள் முழுமையாக சீரமைக்கப்பட உள்ளதாகக் கூறிய அஸ்வினி வைஷ்ணவ், இதற்காக ரூ. 3,861 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும், பல ஆண்டுகளாக ரயில் கட்டணம் ஒரே நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். விரைவில் புறநகர் ரயில்களில் மெட்ரோ ரயில் போன்று குளிர்சாதன வசதி செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.