டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. நாக்பூர் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வின் 36 ரன்களுக்கு அவுட்டாக்கி வெளியேற்றினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450-வது விக்கெட் இது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.
முன்னதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அஷ்வின் 89 போட்டிகளில் இரண்டாவதாக 450 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார். இந்திய அளவில் முன்னாள் வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இருப்பினும் அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், அஸ்வின் இந்த சாதனையை 89 போட்டிகளிலேயே எடுத்து அசத்தியுள்ளார்.
-ம.பவித்ரா








