அருணாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி எம்.எல்.ஏ.-க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அருணாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து, மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் அங்கு 2 மக்களவை தொகுதிகளுக்கும், 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு உள்பட பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் 6 தொகுதிகளில் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதர 4 தொகுதிகளில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தபோதும், பின்னர் திரும்பப் பெற்றுவிட்டனர்.
இதனையடுத்து அவர்கள் 10 பேரும் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வாகியதாக மாநில தேர்தல் அதிகாரி பவன் குமார் அறிவித்தார். மேலும் இந்த 10 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 50 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அவர் தெரிவித்தார். இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 2 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.