ஆரணி அருகே எவ்வித பாதுகாப்பு கவசங்களும் அணியாமல் கழிவு நீர் கால்வாய்களில் இறங்கி கழிவுகளை தூய்மைப் பணியாளர் அகற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் நகராட்சியில் உள்ள குப்பை கழிவுகளை அப்புறம் படுத்தும் பணியில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரணி காந்தி மார்கெட் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏராளமான மனித கழிவுகள், இறைச்சி கழிவுகளால் அப்பகுதியில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் தினமும் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகின்றன. இது சம்பவம் குறித்து அப்பகுதி பொது மக்கள் கொடுத்த புகாரின் பேரில் நகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவர் கால்வாயில் பணி செய்துள்ளார்.
அப்போது அவர் எவ்வித பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல் வெறும் கைகளால் கழிவுகளை அகற்றி உள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே எவ்வித பாதுகாப்பு கவசங்களும் இல்லாமல் பணி செய்கின்ற தூய்மைப் பணியாளருக்கு எளிதில் நோய் கிருமிகள் தாக்கப்பட்டு உடல் பாதிப்பு ஏற்பட கூடும் என்றும், அவருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வேடிக்கை பார்க்கும் நகராட்சி நிர்வாகத்தின் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
—கோ. சிவசங்கரன்







