ரவுடிகளுக்கு ஆப்பு வைக்கும் APPஐ தமிழக காவல்துறை உருவாக்கி உள்ளது. அது என்ன APP? அதன் செயல்பாடுகள் என்ன? ரவுடிகளை கண்காணிக்க அந்த APP எந்த வகையில் காவல்துறைக்கு உதவுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் குற்றங்கள் பல விதங்களில் நடந்து கொண்டு இருக்கிறது. நூதன குற்றவாளிகளை நூதன முறையில் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழக காவல்துறை. ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க காவல்துறை நடவடிக்கைகளை பல விதங்களில் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு வகையாக ரவுடிகளின் பட்டியலை டிஜிட்டல் மயமாக்கி ரவுடிகளுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது காவல்துறை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
’TRACKD APP’ என்ற செயலியை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் விவரங்களை டிஜிட்டல்மயமாக்குவதுதான் TRACKD APP செயலியின் முக்கிய நோக்கம் என்றும், இதன்மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை எளிதாக கண்காணிக்க முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த TRACKD APPஐ உருவாக்கியவர், சென்னை காவல்துறையின் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா. TRACKD APPஐ தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்து நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். தமிழக முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த ஆப் பயன்படும்படியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. TRACKD APP மூலம் ரவுடிகளுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்து குற்றங்களை தடுக்க முடியும் என்கிறார் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.
தமிழக முழுவதும் 30 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவர்களின் அனைத்து விவரங்களும் TRACKD APPல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிக்கை விவரங்கள், ரவுடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்?, பிணை பத்திரங்களின் காலாவதி தொடர்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணைகள், குற்றத்தின் வகைகள் போன்றவற்றின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வகைப்படுத்தி TRACKD APPல் வைக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளுக்கு அவர்களது விரல் நுனியில் பல்வேறு முக்கிய விவரங்களை TRACKD APP வழங்கும் என்கின்றனர் காவல்துறையினர்.
TRACKD APPல் 39 மாவட்டங்கள், 9 ஆணையரகங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் விவரங்கள் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டுள்ளன. ரவுடிகளை கண்காணிப்பதோடு, பழிவாங்கும் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் சமூக விரோதச்செயல்கள், குற்றங்களை தடுக்கவும் உதவும் என்கின்றனர் காவல்துறையினர்.
- முதன்மை செய்தியாளர் ராகவேந்திரன், குற்றப்பிரிவு செய்தியாளர் சுப்பிரமணியன் நியூஸ் 7 தமிழ்