75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திமுகவினர் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அதனை பெரிய அளவில் கொண்டாட மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில் மாபெரும் பேரணி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆவடியில் நடைபெற்றது.
ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கிய இந்த பேரணியில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் இந்திய தேசியக் கொடிய கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பேரணி இறுதியாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நிறைவு பெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய கொடி ஏந்தி நடைபெற்ற பேரணி மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றதாகக் கூறினார். தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் இடையே தேசிய பற்றை வெளிப்படுத்தும்விதமான போட்டிகள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
75வது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய கொடியினை மக்கள் தங்கள் வீடுகளில் ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அண்ணாமலைக் கேட்டுக்கொண்டார். அதே போல் திமுக தலைவர் என்கிற முறையில், அக்கட்சியினர் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற முக.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
பாலிலும் – பால் கவரிலும் ஊழல் என அதன் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவிப்பதாக கூறிய அண்ணாமலை, அமைச்சர் நாசர் பால்வளத்துறையில் செய்த ஊழல் தெளிவாக தமிழ்நாடு மக்களுக்கு தெரியவந்துள்ளதாகக் கூறினார். அமைச்சராக இருப்பதற்கு தாம் தகுதி உடையவரா என தன்னை அமைச்சர் நாசர் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.








