அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 7 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் 9-வது மாஜிஸ்திரேட், 7 நாட்கள் ஞானசேகரனை காவலில் வைத்து விசாரிக்கக் காவல்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல் என 20 வழக்குகள் நிலுவையில் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதாவது, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன், முதலில் அந்த பகுதியில் வாகனத் திருட்டு, ஆடு, மாடு திருட்டு போன்ற சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதும், பிறகு வீடு புகுந்து திருடுவது, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்த நிலையில், சிலருடன் சேர்ந்து தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

பிறகு பிணையில் விடுதலையான ஞானசேகரன், சென்னைக்கு இடம் பெயர்ந்து, 2019-ஆம் ஆண்டு முதல் பிரியாணி கடை நடத்தி வந்ததும், அப்போதும் சில குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.