அநீதி’ திரைப்படத்தை ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளியும் பார்க்க வேண்டும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வசந்தபாலன் வெயில், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அநீதி’. இந்த படத்தில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
அநீதி படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் வனிதா விஜயகுமார், நடிகர் அர்ஜுன் சிதம்பரம், சுரேஷ்சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், டி.சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 
மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நினைவாக அவருடைய கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிவி.பிரகாஷ் அப்பாடலைப் பாடியுள்ளார். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது.அநீதி படம் வரும் ஜூலை 21-ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர்,
இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தை அருமையாக எடுத்துள்ளார். படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் நம்மை அழ வைக்கிறார். ஒவ்வொரு தொழிலாளியும் முதலாளியும் பார்க்க வேண்டும். நமக்கு கீழ் வேலை செய்யும் மனிதர்களை எப்படி நடத்த வேண்டுமென கற்றுக்கொடுக்கும் சிறந்தபடமாக அநீதி இருக்கும் என அவர் கூறினார்.







