விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து வெளி வந்த ‘பேபி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலமாக தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. அவரது தோற்றமும், நடிப்பும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. அர்ஜுன் ரெட்டி கதாப்பாத்திரத்தை போலவே ரசிகர்கள் தங்களின் சிகை, தோற்றங்களை மாற்றிக்கொண்டனர்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த மிகப்பிரபலமான நடிகரான விஜய் தேவரகொண்டாவின் தம்பி தான் ஆனந்த் தேவரகொண்டா. இவர் இயக்குநர் சாய் ராஜேஷ் இயக்கத்தில் ‘பேபி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் வைஷ்ணவி, விராஜ் அஸ்வின் ஆகியோர் நடித்திருந்தனர். காதலியால் ஏமாற்றத்துக்கு உள்ளாகும் நாயகனின் கதையாக உருவான இப்படம் கடந்த கடந்த ஜூலை 14 ஆம் தேதி தெலுங்கில் வெளியானது.
வெளியாகி 12 நாள்களே ஆன நிலையில், இப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.7 கோடியில் தயாரான ‘பேபி’ வசூலில் ஆந்திர பாக்ஸ்ஆஃபிஸை கலங்கடித்து வருகிறது. நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ கைகொடுத்ததுபோல், தற்போது அவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’ திரைப்படம் பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருவதாகவும் அதிக விலைக்குக் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







