இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் உருவாகிவிட்டது என்று காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் இன்று நடைபெறக் கூடியது இந்தியா என்றும் பார்த்திராதது. இந்த சர்வாதிகாரத்தை யார் யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் எல்லாம் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் உருவாகிவிட்டது. இந்த சர்வாதிகார ஆட்சி நடைபெறுவது இந்தியாவில் இருக்கக்கூடிய 2, 3 பணக்காரர்களுக்காக மட்டும் தான். எதிர்க்கட்சிகளின் குரல் வளை முடக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்தையும் நடத்துவதற்கு அரசு தயாராக இல்லை. கடந்த நூற்றாண்டில் இந்தியா என்னென்னவற்றையெல்லாம் உருவாக்கி வைத்திருந்ததோ அவையெல்லாம் இன்று நம் கண் முன்னாலேயே அடித்து உடைக்கப்படுகிறது.
இன்று நடைபெறும் இந்த சர்வாதிகார ஆட்சியை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர்களா? இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை சுதந்திரமான அமைப்புகளும் இன்று மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சுதந்திரமான அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கட்டுப்படுத்துகிறது. இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது.
நான் எந்த அளவிற்கு மக்களிடம் உண்மையை கொண்டு செல்கின்றோனோ அந்த அளவிற்கு தாக்கப்படுவேன். ஆனால் இதற்காக உண்மையைச் சொல்லும் எனது வேலையை மட்டும் நான் நிறுத்திக் கொள்ள மாட்டேன்.
எனக்கு பயம் கிடையாது. உண்மையில் நான் இப்படி தாக்கப்படும் பொழுது மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். போரில் காயம் ஏற்படும் பொழுது எப்படி மகிழ்ச்சியாக இருக்குமோ அது போல இருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகம் நினைவில் இருக்க கூடிய விஷயமாக மட்டுமே மாறிவிட்டது.
நாட்டில் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் என்ன துயரப்படுகிறார்கள் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் மத்திய நிதித்துறை அமைச்சரிடமில்லை. அவர் வெறும் ஊது குழல் ஆகவே இருக்கிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.