பழுது நீக்கும் பணிக்காக சென்னை வந்துள்ள அமெரிக்க கப்பல்

அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த இராணுவ தளவாட கப்பல் முதல் முறையாக பழுது நீக்கும் பணிக்காக சென்னைக்கு வந்துள்ளது. கப்பல் கட்டும் துறையில் இந்தியா புதிய அத்தியாயத்தை சந்தித்து வருவதாக இந்தியபாதுகாப்பு துறை செயலாளர் அஜய்…

அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த இராணுவ தளவாட கப்பல் முதல் முறையாக பழுது நீக்கும் பணிக்காக சென்னைக்கு வந்துள்ளது. கப்பல் கட்டும் துறையில் இந்தியா புதிய அத்தியாயத்தை சந்தித்து வருவதாக இந்தியபாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க கப்பற்படையை சேர்ந்த இராணுவ தளவாட கப்பலான யு எஸ் என் எஸ் சார்லஸ் ட்ரூ. இந்திய பசுபிக் கடல் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். அமெரிக்கா கப்பற்படை கப்பல்களுக்கு தளவாட உதவிகள் செய்து வருகிறது.குறிப்பாக உணவு, எரிபொருள், கப்பல் பாகங்கள், மெயில் சேவை உள்ளிட்ட சேவைகள் வழங்கும் கப்பலாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்க படைகளுக்கு மட்டுமல்லாமல், இந்திய பசிபிக் பகுதியில் உள்ள பிற நட்பு நாட்டின் கப்பல்களுக்கும் இது போன்ற உதவிகளை செய்து வருகிறது.

689 அடி நீளம் கொண்ட இந்த கப்பல், 41 ஆயிரம் டன் பொருட்களை ஒரே சமயத்தில் எடுத்து செல்லும் திறன் கொண்டது. இதில் 63 கப்பல் சிப்பந்திகள் இருப்பார்கள். இதில் மளிகை பொருட்கள், எரிவாயு, ஹார்டுவேர், அஞ்சல் வசதியும் உள்ளது. இந்நிலையில் இந்த கப்பல் பழுதடைந்துள்ள காரணத்தால், அதன் பழுதுகளை சரி செய்ய சென்னை வந்துள்ளது.

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான உள்ள எல்& டி துறைமுகத்தில் அமைந்துள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல் பழுது நீக்கும் செய்யப்பட உள்ளது. அமெரிக்க இராணுவத்தால் கடந்த 2010 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த கப்பலில் உள்ள சில பாகங்கள் சீரமைக்கப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கப்பலை பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார் நேரில் வரவேற்று பார்வையிட்டார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும், இந்திய அமெரிக்க பாதுகாப்பு உறவுக்கும் குறிப்பிட தகுந்த மிக முக்கிய நாள் என கூறினார். மிகவும் குறுகிய காலத்தில், அமெரிக்கா கப்பற்படை கப்பல், எல் அண்டு டி துறைமுகத்தில் பழுது நீக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த பகுதியை தேர்வு செய்த அமெரிக்காவுக்கு நன்றி கூறினார். இந்திய அமெரிக்க இடையிலான உறவு நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக கூறிய அவர், இந்திய பசுபிக் கடற்பரப்பில் இரு நாடும் பல முன்னேற்றங்களை அடைந்து வருவதாக தெரிவித்தார்.

இந்தியாவின் கப்பல் கட்டும் துறை உலக தரத்தில் இருப்பதாக கூறிய அவர், இந்திய
கப்பல் மட்டுமல்லாமல், சுவீடன், நார்வே, டென்மார்க் உள்ளிட்ட பிற நாடுகளின்
கப்பல்களையும் தயாரித்து வருகிறது. கடந்த 2015-2016ம் ஆண்டில் 1,500 கோடி ரூபாயாக இருந்த இந்த ஏற்றுமதி வர்த்தகம், தற்போது 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றார்.

இது கடந்த ஏழு ஆண்டுகளில் 80 சதவீத வளர்ச்சியாகும். கப்பல் கட்டும் துறையில் இந்தியா புதிய அத்தியாயத்தை சந்தித்து வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல அமெரிக்க கப்பல்கள் இந்தியாவில் பழுது நீக்கம் செய்யப்படும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக உறுப்பினர் ஜூடித் ராவின், இனி மேலும் பல கப்பல்கள் இங்கு பழுது நீக்கம் செய்யப்படும் இது, இந்தியா அமெரிக்கா இடையே இந்திய பசுபிக் பகுதியில் நீடித்த, வளமான, அமைதியான சூழல் ஏற்படும் என கூறினார்.

முன்னதாக பேசிய எல் அண்டு டி ஆலோசகர், ஜே டி பாட்டில், இந்த பணியால் இந்திய பசுபிக் உறவு மேலும் வலுவடையும். இந்தியாவிலேயே மிகவும் நவீனமான கப்பல் கட்டும் தளம் இது என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.