ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில், அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடி அமர்ந்திருந்த இடத்திற்கே தேடி சென்று அன்புடன் ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி-7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. கடைசிநாளான இன்றுடன் மாநாடு நிறைவு பெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பிரதமர் மோடி இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உட்பட உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து உரையாற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநாட்டில் பேசுவதற்கு முன்பாக, பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆரத் தழுவி வாழ்த்து கூறியதோடு, இருவரும் சிறிது நேரம் உரையாடினர். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
ஜி-7 மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும், பிரதமர் நரேந்திர மோடியும் ஆரத் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதேபோல் ஜி – 7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நேற்று சந்தித்துப் பேசினார். இருந்தும் இவர்களது சந்திப்பை தாண்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோடியை தேடிச்சென்று கட்டி ஆரத்தழுவி பேசிய நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா