அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்துள்ளதால் வாரம் மூன்று நாட்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க உள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பயணம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. பனி லிங்கத்தை தரிசிக்க செல்லும் பக்தர்களின் முதல் குழுவின் பயணத்தை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதனிடையே கடந்த 9-ம் தேதி ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையே அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. டி2 மரோக் ரம்பனில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த யாத்திரையில், இதுவரை 4.30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். நேற்று 1,600-க்கும் மேற்பட்டார் குகைக் கோயிலில் தரிசனம் செய்தனர். 736 ஆண்கள், 151 பெண்கள், 25 சாதுக்கள் மற்றும் 3 சாத்வீக்கள் உள்பட 915 பயணிகள் கொண்ட குழு பகவதி நகர் யாத்ரி நிவாஸிலிருந்து இன்று புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாகக் குறைந்துள்ளதால் ஒரு நாள் விட்டு ஒருநாள்(அதாவது மாற்று நாள்களில்) மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க உள்ளதாக ஸ்ரீ அமர்நாத் ஆலய வாரியம் அறிவித்துள்ளது. 62 நாள்கள் நிகழும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ம் தேதியோடு நிறைவடைகின்றன.







