உக்ரைனில் இருந்து நாடு திரும்ப விருப்பம் தெரிவித்த தமிழ்நாடு மாணவர்கள் அனைவரும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்
உக்ரைனின் சுமி நகரில் சிக்கித்தவித்த தமிழ்நாட்டை சேர்ந்த 53 மாணவர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தனர். டெல்லி விமான நிலையத்திற்கு வந்த மாணவர்களை தி.மு.க. எம்.பி திருச்சி சிவா தலைமையிலான தமிழ்நாடு அரசின் மீட்புக்குழுவினர் வரவேற்றனர். இதைதொடர்ந்து மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு, சென்னை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 34 மாணவர்கள் நாடு திரும்ப விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டார்கள் என்றும் திருச்சி சிவா குறிப்பிட்டார்.
இந்நிலையில், ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கல்வி பயின்ற மாணவர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நமது நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமான கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்தியாவிலேயே தங்கள் கல்வியைத் தொடர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நியூஸ் 7 தமிழிடம் வலியுறுத்தினர்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இயங்கிவரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் பயின்றுவரும் மாணவர்களுக்கு வரும் 21-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதன்பின்னர் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உக்ரைனில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் வரும் 14-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளன. இதனால் நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








