2-ம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் MBBS படிப்பில் அனைத்து இடங்களும் நிரம்பியதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
2020-21-ம் கல்வியாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு கடந்த நவம்பர் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 4-ம் தேதி தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல் நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 5-ம் தேதி முதல் பொதுப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பொதுப்பிரிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 182 எம்.பி.பி.எஸ். இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 206 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும், இருந்தன.அதே போல் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 68 பி.டி.எஸ். இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 965 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களும் இருந்தன.
5 நாட்களாக நடத்தப்பட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் இருந்த அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்து நிரம்பியதாகவும், அதேபோல் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்த பி.டி.எஸ். இடங்களும் நிரம்பியதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் மட்டும் 65 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் உள்ளதாகவும், நாளை காலையுடன் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. நாளை பிற்பகலில் இருந்து நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கி புதன்கிழமை வரை நடக்கிறது