நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தனர். தாயார் உயிரிழந்த தகவல் அறிந்து அஜித் குமார் துபாயில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தார்.
இந்நிலையில் அஜித் குமார் தாயாரின் உடல் தகனம் இன்று நடைபெற்றது. ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து பெசன்ட் நகர் மயானம் வரை இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அமரர் ஊர்தியை பின் தொடர்ந்து அஜித் மற்றும் அவரது உறவினர்கள் காரில் சென்றனர். அதைத்தொடர்ந்து பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு மறைந்த தாயின் உடலை நடிகர் அஜித்குமார் சுமந்து சென்றார். இறுதிச்சடங்கிற்கு பிறகு அவரது தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.







