அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே 23 தீர்மானங்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் புதிய தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவு இல்லை. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சூழ்நிலைகள் பொறுத்து விவாதிக்கப்படும்.” என கூறினார். மேலும், “நீதிமன்றம் வழிகாட்டுதல் படி பொதுக்குழு நடக்கும்.
அனைவரின் கருத்துக்களை கேட்கதான் பொதுக்குழு கூட்டப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜனநாயக முறைப்படி 4.30 மணி நேரம் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சூழ்நிலைகள் பொறுத்து இது குறித்து விவாதிக்கப்படும்.” என்று கூறினார்.
தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்ததாவது, “எடப்பாடியார் அதிகாரமிக்க ஒற்றை தலைவராக விரைவில் வருவார். நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம். எதிர்காலத்தில் மிக விரைவில் தொண்டர் விருப்பப்படி ஒற்றை தலைமை உருவாகும். ஒன்றரை கோடி தொடர்களின் இயக்கம் வெற்றி பாதையில் செல்ல எடப்பாடியார் அதிகாரமிக்க ஒற்றை தலைவராக விரைவில் வருவார். நல்லபடியாக சுமூகமாக பொதுக்குழு நடைபெறும்” என்று கூறினார்.
இந்நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவில் எந்த மாறுபாடாக இருந்தாலும் மாறிவிடும். எந்த மன சஞ்சலமும் இருக்காது. நிச்சயம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். கட்சிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பது, பொதுக்குழுவுக்கு மக்கள் கூடியுள்ள கூட்டமே சாட்சி” என செல்லூர் ராஜூ தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.