நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதா மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் விவகாரத்தில் அதிமுக மீது பொதுவெளியில் தவறான தகவல்களை பரப்பப்படுவதாகக் கூறினார். நீட் என்ற வார்த்தை எப்போது உருவாக்கப்பட்டது? எந்த ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டது? என கேள்வி எழுப்பிய அவர், நீட் விலக்கு விவகாரத்தில் அதிமுக மீது அவதூறு பரப்பப்படுவதையே எதிர்ப்பதாக குறிப்பிட்டார். மேலும், நீட் தேர்வு தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து அரசு எடுக்கும் முடிவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக பேசிய அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர், எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படாதபோதே 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான் என குறிப்பிட்டார்.
2005ஆம் ஆண்டிலேயே மருத்துவ மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு வேண்டாம் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாகவும், நீட் தேர்வை கொண்டுவந்ததே காங்கிரஸ் தான் எனவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய விஜயபாஸ்கர், நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து அதிமுக எந்த சூழலிலும் தடம் மாறாது என தெரிவித்த விஜயபாஸ்கர், நீட் விவகாரத்தை சட்ட நுணுக்கத்தோடு மிக கவனமாக அணுக வேண்டும் என்றும், இதில் திராவிட கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.