வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிக்காக, அதிமுக அமைப்பு ரீதியிலான அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் சென்னையில் இருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய குடியரசு கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிமுக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்வது தொடர்பாக அதிமுக ஆட்சிமன்ற குழு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் ஆலோசனை நடத்தலாம் என்பதை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னையிலேயே இருக்குமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.







