வெள்ளளூர் பேருந்து நிலையத்திற்கு அதிமுக அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை – செந்தில் பாலாஜி

கோவை, வெள்ளளூர் பேருந்து நிலையத்திற்கு கடந்த அதிமுக அரசின் சார்பில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில்,…

senthil balaji

கோவை, வெள்ளளூர் பேருந்து நிலையத்திற்கு கடந்த அதிமுக அரசின் சார்பில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், கோவை சித்ரா
பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் இருந்து காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். கோவையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, அறிவிக்கபட்ட ஐந்து மாதங்களில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைத்ததற்கு தமிழக முதல்வருக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதில் அடுத்தகட்டமாக அதிகாரிகள் முடிவு செய்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கு முறை ஆணையத்தின் உறுப்பினரை நியமிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டான்காயிர் நிறுவனம் தொடங்கப்பட்டதால் கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரை கடந்து உற்பத்தி அதிகரிப்பதோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் இன்று துவக்கி வைக்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதி
அறிவிக்கப்பட்டு, சட்டமன்றத்தில் அறிவித்து ஐந்து மாதங்களில் இந்த நிறுவனம்
துவங்கப்பட்டது மகிழ்ச்சிக்குரியது என தெரிவித்தார்.

அமுல் கந்தசாமி தொடர்பான குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர்,
ஆதாரமில்லாத செய்திகளை, குற்றசாட்டுகளைக் கூற வேண்டாம். சிலரது இருப்பை செய்தியாளர்கள் இருப்பது போன்று காண்பிக்க வேண்டாம் எனவும், பதில்
சொல்லாதவர்களைப் பற்றி திரும்பத் திரும்ப தன்னிடம் பதில் கூறவைத்து அவர்களின்
இருப்பை காட்டுவதை தவிர்க்கலாம் எனவும் தெரிவித்தார்.

கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதில் அதிமுக பயனாளிகளை அழைத்து வந்து கூட்டம் நடத்தியதாக இ.பி.எஸ். குற்றம் சாட்டியது தொடர்பான கேள்விக்கு, பயனாளிகளின் பட்டியல் இ.பி.எஸ். இடம் இருக்கிறதா?. ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு எப்படி வருவார்கள்?. நான்கு மாதங்களாக பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஐந்து ஆண்டு ஐம்பது ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி என வெற்று விளம்பரத்தை முன்வைத்தனர் எனவும், அவ்வாறு வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் ஏன் இன்னும் 114 கிலோ மீட்டர் தூரம் கோவையில் மண் சாலைகள் இருந்தது எனவும், ஏன் கோவை முழுவதும் இருந்த சாலைகள் பழுதடைந்து போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத சாலைகளாக இருந்தது எனவும் தளர்ச்சி அடைந்தால் எவ்வாறு பொதுமக்கள் இவ்வளவு கோரிக்கைகளை முன் வைப்பார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

வெள்ளளூர் பேருந்து நிலையத்திற்கு கடந்த அதிமுக அரசில் அரசாணை
வெளியிடப்பட்டு நிதி எவ்வளவு ஒதுக்கபட்டது?. செலவழிக்கப்பட்ட தொகையில் அரசு
வழங்கிய நிதி எவ்வளவு?. அதைக் கூறிவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை அதிமுக மேற்கொள்ளட்டும். வெள்ளளூர் பேருந்து நிலையத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு ரூபாய் கூட வரவில்லை. முழுமுழுக்க அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக,
மாநகராட்சியின் பொது நிதியை எடுத்து பேருந்து நிலையத்தின் கட்டுமானங்களுக்கா
செலவு செய்யபட்டுள்ளது. பேருந்து நிலையத்துக்கு சிறப்பு நிதிகளை
ஒதுக்கியதுபோல் இபிஎஸ் கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.