மதுரையில் நடைபெற்றுவரும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, சிறப்பு மலரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. அதிமுக 50 ஆண்டுகளை நிறைவு செய்து 51ஆவது ஆண்டில் பயணிக்கும் வேளையில் மாநாடு நடத்தப்படுகிறது. மேலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் முதல் மாநாடு ஆகும்.
இதற்காக மதுரை வலையங்குளத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இருபெரும் தலைவர்களாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உருவம் தாங்கி கோட்டை போன்ற பிரமாண்ட நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பொன்விழா எழுச்சி மாநாட்டை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது ஹெலிகாப்டரில் இருந்த 600 கிலோ பூக்கள் தூவப்பட்டன. ஜெயலலிதா பேரவை சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு, 3 ஆயிரம் தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாலை 4:20 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநாட்டு விழா மேடைக்கு வருகை தந்தார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவருக்கு வரவேற்புரை வழங்கினர். இதையடுத்து, சட்டம் – ஒழுங்கு, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்காதது உள்ளிட்ட திமுக அரசுக்கு எதிராக 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 16 தீர்மானங்கள் முதலில் நிறைவேற்றப்பட்டன. அதனை அதிமுக நிர்வாகி வைகைச் செல்வன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் வாசித்தனர். அதனைத்தொடர்ந்து 17 முதல் 32 வரையுள்ள தீர்மானங்களை மூத்த அதிமுக நிர்வாகி செம்மலை வாசித்தார்.







