அதிமுக பொதுக்குழு விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல்!

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக – வின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11-ல் சென்னையில் நடைபெற்றது. அதில் கட்சியில் ஒற்றை தலைமை…

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக – வின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11-ல் சென்னையில் நடைபெற்றது. அதில் கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியை சார்ந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட நால்வரும் உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து கடந்த 25ம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தீர்ப்பளித்தது.

மேலும் அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எவரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக “கேவியட்” மனுவை எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தற்போது ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.