அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்காக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான அமைப்புத் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தை போல் அடிப்படை உறுப்பினர்களே ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். கட்சியில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் தேர்தல் நடத்தும் ஆணையர்களாக நியமிக்கப் படுவோர் அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் விதிகள் உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை குறைந்தபட்சம் 25 பொதுக்குழு உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் எனவும்,எந்தவித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உள்ளாகாதவராக இருக்க வேண்டும் என்பதும் உட்கட்சி தேர்தலுக்கான தகுதிகளாக உள்ளன.
தற்போது தேர்தலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் போட்டியிடுகின்றனர். ஒற்றை வாக்கின் மூலம் தேர்வு செய்யப்படுவதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப் பாளர் ஆகிய இரு பதவிகளுக்கும் ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் தான் போட்டியிட முடியும். தனியாக யாரும் போட்டியிட முடியாது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
தேர்தல் ஆணையர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்பு மனுவும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது. இதனால், இருவரும் போட்டியின்றி தேர்வாகவுள்ளனர்.